நபியே! உமது மனைவிகளின் பொருத்தத்தை நாடியவராக, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் (உமக்கு) விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
അൽ മുല്ക് الملك Al-Mulk
സൂറത്ത് അൽ മുല്ക് (Al-Mulk), ഖുർആൻ അധ്യായം 67 — അറബി ആയത്തുകളും தமிழ் വിവർത്തനവും ഉൾപ്പെടെ 30 ആയത്തുകൾ വായിക്കുക. Read Surah Al-Mulk with Arabic text and தமிழ் translation.
அவன்தான் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான் - உங்களில் செயலால் மிக அழகானவர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக. அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
அவன் ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். ரஹ்மானின் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வையும் நீர் பார்ப்பதில்லை. ஆக, பார்வையை நீர் மீண்டும் திருப்புவீராக! ஏதாவது பிளவுகளை (விரிசல்களை) நீர் (வானத்தில்) பார்க்கிறீரா?
பிறகு, மீண்டும் பார்வையை இரு முறை திருப்புவீராக! அந்தப் பார்வை இழிவடைந்ததாக உம் பக்கம் திரும்பிவிடும். இன்னும், அது களைத்துவிடும்.
திட்டவட்டமாக கீழ் வானத்தை (நட்சத்திரம் எனும்) விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். இன்னும், (வானவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்கிற) ஷைத்தான்களை எறிவதற்காக அவற்றை (-நட்சத்திரங்களை) ஏற்படுத்தினோம். இன்னும், அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பின் தண்டனையை தயார் செய்துள்ளோம்.
தங்கள் இறைவனை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தின் தண்டனை உண்டு. அது மீளுமிடங்களில் மிகக் கெட்டது.
அவர்கள் அ(ந்த நரகத்)தில் எறியப்பட்டால், - அதுவுமோ கொதித்துக் கொண்டிருக்க - அதில் (ஒரு) கடுமையான சத்தத்தை செவியுறுவார்கள்.
அ(ந்த நரகமான)து (நிராகரிப்பாளர்கள் மீதுள்ள) கோபத்தால் (தனித் தனியாக பிரிந்து) தெரித்துவிட நெருங்கிவிடும். அதில் (பாவிகளின்) ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள்.
அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை, திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!) நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை என்று நாங்கள் கூறினோம்.”
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் செவி ஏற்பவர்களாக; அல்லது, சிந்தித்து புரிபவர்களாக இருந்திருந்தால் (இன்று) நரகவாசிகளில் ஆகி இருக்க மாட்டோம்.”
ஆக, அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, நரகவாசிகளுக்குக் கேடுதான்!
நிச்சயமாக எவர்கள் மறைவில் தங்கள் இறைவனை பயப்படுவார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
உங்கள் பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள்! அல்லது, அதை உரக்கப் பேசுங்கள்! நிச்சயமாக அவன் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.
எவன் படைத்தானோ அவன் அறியமாட்டானா? அவன்தான் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.
அவன்தான் பூமியை உங்களுக்கு (நீங்கள் வசிப்பதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும்) இலகுவாக ஆக்கினான். ஆகவே, (உங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி) நீங்கள் அதன் பல பகுதிகளில் செல்லுங்கள்! அவன் வழங்கிய உணவில் இருந்து உண்ணுங்கள்! அவன் பக்கம்தான் (மறுமையில் நீங்கள்) எழுப்பப்படுவது இருக்கிறது.
வானத்தின் மேல் உள்ளவன் உங்களை பூமியில் சொருகிவிடுவதை நீங்கள் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது அது (-பூமி) குலுங்கும். (நீங்கள் அழிந்துவிடுவீர்கள்.)
அல்லது, வானத்தின் மேல் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை நீங்கள் பயமற்று இருக்கிறீர்களா? (நீங்கள் எனது தண்டனையை கண்கூடாக பார்க்கும் போது) என் எச்சரிக்கை எப்படி இருந்தது என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்!
இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் திட்டவட்டமாக பொய்ப்பித்தனர். ஆக, எனது மறுப்பு(ம் மாற்றமும்) எப்படி இருந்தது? (என்று சிந்தித்து பாருங்கள்!)
அவர்கள் தங்களுக்கு மேல் பறவைகள் (இறக்கைகளை) விரித்தவைகளாகவும் (சில நேரம் அவற்றை தம் விலாக்களுடன்) மடக்கியவைகளாகவும் பறப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவை கீழே விழாமல் ஆகாயத்தில் யாரும்) அவற்றை நிறுத்தவில்லை, ரஹ்மானைத் தவிர. நிச்சயமாக அவன் எல்லாப் பொருளையும் உற்று நோக்குபவன் ஆவான்.
மாறாக, ரஹ்மான் அல்லாமல் உங்களுக்கு உதவுகிற உங்கள் இராணுவமாக இருக்கிற இவர் யார்? (நீங்கள் அல்லாஹ்வை அன்றி தெய்வமாக யாரை நம்பி இருக்கிறீர்களோ அது உங்களுக்கு உதவ முன்வருமா?) நிராகரிப்பாளர்கள் (பெரும்) ஏமாற்றத்தில் தவிர இல்லை.
மாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கிற இவர் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு யாரும் இருக்கிறார்களா?) மாறாக, அவர்கள் (உங்களுக்கு தொந்தரவு தருவதில்) எல்லை மீறுவதிலும் (சத்தியத்தை விட்டு) விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர்.
ஆக, தனது முகத்தின் மீது கவிழ்ந்தவனாக நடப்பவன் நேர்வழி பெற்றவனா? (-அவன் தன் இலக்கை நோக்கி செல்ல முடியுமா?) அல்லது, நேரான பாதையில் சரியாக நடப்பவனா?
(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை உருவாக்கினான். இன்னும், உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் (அவனுக்கு) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!
(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை பூமியில் (பல ஊர்களில், பல நாடுகளில்) பரப்பினான். இன்னும், அவன் பக்கமே நீங்கள் (மறுமையில்) ஒன்று திரட்டப்படுவீர்கள்.
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (மறுமையில் அல்லாஹ்விடம் நாங்கள் எழுப்பப்படுவோம் என்ற) இந்த வாக்கு எப்பொழுது நிகழும் (என்று எங்களுக்கு அறிவியுங்கள்!)” என அவர்கள் கூறுகிறார்கள்.
(நபியே!) கூறுவீராக! (அது பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.
ஆக, அவர்கள் அ(ந்த மறுமை நிகழ்வ)தை மிக சமீபமாக பார்க்கிறபோது நிராகரித்தவர்களின் முகங்கள் இழிவுக்குள்ளாகி விடும். இன்னும், நீங்கள் எதை தேடி கொண்டிருந்தீர்களோ அ(ந்த மறுமை நாளான)து இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்.
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் மரணிக்க செய்து விட்டால்; அல்லது, அவன் எங்கள் மீது கருணை புரிந்(து இன்னும் சில காலம் உயிரோடு வாழவைத்)தால், (அது அவனது திட்டத்தின் படி அவன் செய்வதாகும்.) ஆக, துன்புறுத்தும் தண்டனையில் இருந்து நிராகரிப்பாளர்களை யார் காப்பாற்றுவார்? (நாங்கள் வாழ்வதும் மரணிப்பதும் உங்களை அல்லாஹ்வின் நரக தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுமா?)” என்று அறிவியுங்கள்.
(நபியே!) கூறுவீராக! “அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன், மகா கருணையாளன்). அவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இன்னும், அவன் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம். ஆக, தெளிவான வழிகேட்டில் யார் இருக்கிறார் என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்.
(நபியே!) கூறுவீராக! “உங்கள் தண்ணீர் (அதை நீங்கள் எடுக்க முடியாத அளவிற்கு) ஆழத்தில் சென்றுவிட்டால் யார் உங்களுக்கு மதுரமான தண்ணீரைக் கொண்டு வருவார்? என்பதை (எங்களுக்கு) அறிவியுங்கள்.”